மாவு/சர்க்கரை சத்து
~~~~~~~~~~~~~~~~~~~
நமக்குத் தேவையான மொத்த எரி பொருள் சக்தியில் (Calorie) 60% மாவுச் சத்திலிருந்து கிடைக்க வேண்டும்.
மாவுச்சத்து என்ற சர்க்கரைச்சத்து நமக்கு மூன்று வகையாக கிடைக்கிறது.
(a) காம்பிளக்ஸ் மாவுச் சத்து
அரிசி, பருப்பு, கோதுமை,சிறு தானியங்கள்(கம்பு/ சோளம்/ திணை/ கேழ்வரகு /குதிரைவாலி/ வரகு போன்றவை), காய்கறிகள், சில பழ வகைகள்.
இந்த முக்கிய உணவுகளைச் சாப்பிட்டால், அவைகள் ஜீரணமாகி, இரத்தத்தில் கலந்து, சக்தியைக் கொடுக்க நேரம் அதிகம் தேவைப்படும். இதனால் இவைகளை குறைந்த சர்க்கரைக் குறி (Low Glycaemic Index) என்கிறோம்.
(b) சிம்பிள் மாவுச் சத்து
பால், சில பழ வகைகள் (மாம்பழம், வாழைப்பழம் பலாப்பழம், அன்னாசி பழம், சப்போட்டா பழம், சீதாப்பழம், பேரிச்சை, திராட்சை), வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பனங்கல் சர்க்கரை. குளுக்கோஸ், வெல்லம், தேன்
இவைகளை சாப்பிட்டவுடன் வெகு சீக்கிரத்தில் ஜீரணமாகி, அதிக அளவில் இரத்தத்தில் கலந்து, சக்தியைக் கொடுக்கும். இவற்றை உயர் சர்க்கரைக் குறி (High Glycaemic Index) என்று கூறுகிறோம்.
அதனால் இவைகளை, உடலில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உண்ணாது தவிர்க்க வேண்டும்.
(c) நார்ச் சத்து
மாவுச் சத்தின் ஒரு அங்கமான நார்ச் சத்து நம் உணவின் இன்றியமையாதது ஆகும்.
தண்ணீரில் கரையும் தன்மையை
வைத்து, கரையக் கூடிய நார்ச் சந்து, கரையாத நார்ச் சத்து என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
கரையக்கூடிய நார்ச் சத்துகள்,
கீழ்க்காணும் உணவில் உள்ளது.
ஓட்ஸ்.
பழங்கள் - ஆப்பிள், கொய்யா, வாழை, அத்தி
காய்கறிகள் - வெண்டை, கத்தரி, தக்காளி கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சுரைக்காய், வாழைக்காய், முள்ளங்கி பீர்க்கங்காய்.
இந்த நார்ச் சத்து வயிற்றிலும், குடலிலும் ஜீரணம் ஆகாமல், பெருங்குடலுக்குச் சென்று, நன் நுண்கிருமிகளால் பொங்கச் செய்யப்பட்டு (Ferment), அதனால் வெளிப்படும் ஹைட்ரஜன் (Hydrogen), மீத்தேன் (Methane), கரியமில வாயு (Carbon-di-Oxide), கொழுப்பு அமிலங்கள்(short chain fatty acids) வாயிலாக பெருங்குடலின் நுண்கிருமிகளை அழித்தும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் வழி செய்கிறது.
கரையாத நார்ச்சத்து வகைகள் கீழ்க்காணும் உணவில் உள்ளது.
கீரை வகைகள்
பீன்ஸ், கொத்தவரை, முட்டைக்கோசு, காலிபிளவர், புராக்கோலி, நூல் கோல், தட்டைக்காய், அவரைக்காய், தக்காளி முருங்கைக்காய்,
பழங்கள் - சப்போட்டா, கொய்யா,வாழை
முழு தானியங்கள் -அரிசி, கோதுமை, சிறுதானியங்கள்
பருப்பு வகைகள், பயிறு வகைகள்
பெருங்குடலில், கரையாத நார்ச் சத்துக்கள், நீரை தன்னுடன் வைத்துக் கொள்வதால், மலம் போவதை எளிதாக்கி, மலச் சிக்கலைத் தவிர்ப்பதால், கீழ்க்கண்ட நோய்களில் இருந்து காப்பாற்றப்படலாம்
குடல் இறக்கம்
குடல் புற்று நோய்
மூல வியாதிகள்
இவைகள் மட்டுமல்லாமல்,
உடல் எடை குறைதல்
கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள், குடலிலிருந்து இரத்தத்தில் சேர்வதால் எலும்பின் பலம் கூடுதல்
நுரையீரலின் திறனை அதிகரித்தல்
நோயின் எதிர்ப்பு சக்தியை கூட்டுதல் போன்ற நன்மைகள் விளையும்.
நார்ச்சத்தை சேர்க்கும் பொழுது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment